கடவுளின் பார்வை எதுவரை பாயும் – கடவுள் எங்கிருக்கிறார் என்பதை விளக்கும் ஒரு சிறிய கதை!

இடுப்பில் கிழிந்த துணியில் அவலைக் கட்டி கொண்டு சென்ற குசேலர் தாம் கொண்டு வந்த அவலைப் பற்றி கிருஷ்ணரிடம் சொல்லவில்லை. ஆனால், பகவான் பரமாத்மா அதைப் பார்த்துவிட்டார்.


துரியோதனன் அவையில் அவமானத்துக்காளான திரௌபதி தவித்தாள்; கதறினாள். அங்கிருந்த மாமனிதர்கள் புஜபல பராக்கிரம வீரர்கள் பார்த்தனர். ஏதும் செய்யாது இருந்தார்கள். ஆனால் அங்கிருந்து வெகு தொலைவில் (துவாரகையில்) இருந்த பரமாத்மா, தன் அருள்கடாக்ஷத்தால் அங்கு திரௌபதியை நோக்கினான்.

கல்லெடுத்து மண்ணெடுத்து பரமனுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டார் திருநின்றவூரை சேர்ந்த பூசலார்; கையில் பொருள் இல்லை ; தவித்தார் ; பொருள் தேடி அலைந்தார். கிட்டவில்லை . கடைசியில் தனக்குத் தானே ஒரு வழி கண்டுபிடித்தார். 'நிலத்தை செப்பனிட்டு நெடுங்கோயில் கட்டுவதை விட மனத்தை செப்பனிட்டு மனக்கோயில் கட்டலாம்'என்று தீர்மானித்தார்.

அவ்வாறே மனத்தினுள் ஆலயம் எழுப்பினார். இது யாருக்கும் தெரியாது. மனிதர்கள் இதை யாரும் பார்க்க வில்லை. ஆயின் மகேசன் பார்த்து விட்டார். பார்த்தது மட்டுமல்ல இது குறித்து பல்லவ வேந்தனிடம் சென்று சொல்லியும் விட்டார். அதனால்தான் பல்லவ வேந்தன் தேடி வந்த போது, பூசலார் உள்ளத்தில் கட்டிய கோயில் பற்றி வெளி உலகம் அறிந்தது.

குசேலரின் இடுப்பு வரை பாய்ந்த தெய்வ கடாக்ஷம் திரௌபதியின் இருப்பு வரை பாய்ந்தது. அதே கடாக்ஷம், பூசலார் இதயம் வரையும் பாய்ந்தது. இதயத்திற்குள்ளும் பாய்ந்தது. நன்மைகளை நிகழ்த்தும்போது நம்மை ரக்ஷிக்கும் இறைவனின் பார்வை தீமை செய்தால் என்ன செய்யும்?

குருஷேத்திரத்தில் யுத்தம் முடியும் தருவாயில் துரியோதனன் தன்னை மறைத்துக் கொள்ள நினைத்து மடுவிற்குள் சென்று மறைந்து கொண்டான். கிருஷ்ணன் பார்க்காமல் விடுவானா? தான் மறைந்து கொண்டால் தன்னை யாரும் காண முடியாது என்று எண்ணி தனது உருவை மாற்றிக் கொண்டான் அரக்கன் சூரபத்மன் சுய உருவை விடுத்து வேறு பல உரு எடுத்தான்.

மரமாய் நின்றான்; பிறர் தன்னைக் காண முடியாது என்று நினைத்து விட்டான். முருக பெருமான் அவனைக் காணாமலா விட்டார். அப்படியானால் ... கடவுள் காண்கிறார் ; எல்லாவற்றையும் காண்கிறார்; எங்கெங்கும் காண்கிறார் ; எப்போதும் காண்கிறார். ஆதலால் நல்லதை மட்டும் செய்யுங்கள், மறந்தும் தீயதை நினைக்கவும் வேண்டாம்.