வெளிநாட்டிலிருந்து மதப்பிரச்சாரம் செய்ய வந்த நபர்களிடமிருந்து மதுரையை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இஸ்லாம் மத பிரச்சாரம் செய்ய வந்தவர்களால் பரவிய கொரோனா! மதுரை நபர் மரணத்தின் திடுக் பின்னணி!
மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிந்து உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அதே வேளையில் இவருக்கு யாரிடமிருந்து இந்த வைரஸ் பரவியது என விசாரணை செய்யப்பட்டது.
அப்போது பல தகவல்கள் வெளிவந்தன. அதாவது மதப்பிரச்சாரம் செய்யக்கூடியவர்கள் நான்கு பேர் தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி வந்துள்ளனர். பின்னர் மேலும் நான்கு பேர் தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளனர்.
மொத்தத்தில் எட்டுபேர் ஒன்றிணைந்து மதுரைக்கு மத பிரச்சாரம் செய்வதற்காக வந்துள்ளனர். மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் தங்கியிருந்து பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். அவர்களுடன் மதுரையை சேர்ந்த நபரும் ஒன்றாக தங்கி பழகியிருக்கிறார்.
அவர்கள் மூலம் தான் மதுரையை சேர்ந்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு மற்றும் உடலில் சர்க்கரை நோய் இருந்துள்ளது. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மதுரையை சேர்ந்த நபரின் உயிரிழப்பை பற்றி குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் நிகழ்ந்த முதல் உயிர் பலி இதுவே என்பது கசப்பான உண்மையாகும்.
அதுமட்டுமில்லாமல் அந்த நபரின் குடும்பத்தினரையும் நம்முடைய தமிழக அரசாங்கம் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்து வருகிறது. மேலும் அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.