அரசின் சட்டத்தை முறையாக பின்பற்றுங்கள்!ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு மிக முக்கியம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து!

ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் எனவும் பொதுமக்களின் நலனுக்காக விதிக்கப்பட்டுள்ள அரசின் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சைனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது உலகெங்கிலும் உள்ள 199 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டி உள்ளது. 

இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் காய்கறிகள், குடிநீர்,மருந்து, பால், உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல், இறைச்சி, மீன், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்களில் உணவு பொருட்களை பார்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேசமயம் தமிழகத்தில் பல இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் தேவைப்படுபவர்கள் பார்சலில் உணவுகளை பெற்றுக்கொண்டு செல்லலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வினை மேற்கொண்ட பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம் ஆகையால் தான் நாங்கள் மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்துகிறோம் எனவும் அவர் கூறினார். இதுவரை தமிழகத்தை சேர்ந்த 124 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் யாரும் அச்சப்படாமல் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.