10 ஆண்டுகளில் 3,470 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது.
இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர்? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்
இலங்கைக் கடல்பகுதியில் மீன் பிடித்ததற்காக இந்த மாதம் 2-ஆம் தேதிவரை கடந்த பத்தாண்டுகளில் 3,470 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்; அவர்களில் 20 பேர் இன்னும் அங்கு சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர் என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட இரு தரப்பு ஒப்பந்தங்கள், பன்னாட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மீறி, கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது? இது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
அதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், ‘‘வங்கக்கடலில் பன்னாட்டு எல்லையைக் கடந்து இலங்கைக் கடல்பகுதியில் மீன் பிடித்ததற்காக 2010-ஆவது ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 3,470 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.
அவர்களில் 3,450 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவர், 2020-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் என மொத்தம் 20 பேர் இலங்கைச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இரு நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவின் நான்காவது கூட்டத்தையும், அமைச்சர்கள் நிலையிலான மூன்றாவது சுற்று பேச்சையும் விரைவில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறினார்.