புதருக்குள் பச்சிளம் குழந்தை! பசியால் துடித்த பரிதாபம்! அப்படியே விட்டுச் சென்ற தாய்! பதற வைக்கும் சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 6 மாத பெண் குழந்தையை பெற்றோர்கள் கோவிலில் விட்டுச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள காடையூர் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் மாலை வேளையில் கோவிலின் அருகே உள்ள ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து கோவிலில் துப்புரவு பணியாளராக இருந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்தபோது அங்கு 6 மாத அழகிய பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்துள்ளார். பின்னர் இதுகுறித்து உடனே அருகில் இருந்த ஊர்பொது மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தையை மீட்ட அந்த ஊர் மக்கள் குழந்தையின் பசியை தீர்த்து உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் குழந்தை பத்திரமாக குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் குழந்தையை யார் இங்கு விட்டுச்சென்றது? மற்றும் இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.