அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்காதீங்க, விற்பனை செய்யுங்கள் – ஞானகுரு

குறிப்பாக அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது. இது சரியானதா என்று ஞானகுருவிடம் கேட்டார் மகேந்திரன்.


அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியில் கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திருதியை திதி உள்ளது.

மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.

இந்த நாள் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமிக்கும், அவரது பதியான திருமாலுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்து விதமான துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. அதனால் இந்த நாளில் மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம் வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வழிபாடு செய்கிறார்கள். குறிப்பாக அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது.

இது சரியானதா என்று ஞானகுருவிடம் கேட்டார் மகேந்திரன்.

‘’அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவது நல்ல விஷயம் என்றால் எந்த மடையனாவது அன்று தங்கத்தை விற்பனை செய்வானா..? ஆனால், அன்றும் எல்லா கடைகளிலும் தங்கத்தை விற்பனை தானே செய்கிறார்கள். இதிலிருந்தே இது ஒரு வியாபார யுக்தி என்பது புரியவில்லையா..?

அட்சய திரிதியை வருவதற்கு சில மாதங்கள் முன்பே தங்கம் விலை கூடுவதும் அட்சய திரிதியை அன்று கொஞ்சம் குறைவதும் பல ஆண்டுகளாகவே நடக்கிறது.

இது, மக்களின் மூளையை மழுங்கடித்து சலவை செய்யும் செயல். அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்க வேண்டும் என்று மூளையில் பதிய வைத்துவிட்டதால் என்ன விலைக்கு விற்பனை செய்தாலும் அதை வாங்கத்தான் செய்வார்கள். அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்குங்கள் என்று எந்த கடவுளும் அறிவுரை கொடுக்க மாட்டார். அப்படி கொடுத்தால் அவர் கடவுளே அல்ல, வியாபாரி.

ஆகவே, இந்த அட்சய திரிதியைக்கு கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து பணத்தை வீட்டுக்குக் கொண்டுவாருங்கள். அதுவே, உண்மையான செல்வம்’’ என்றார் ஞானகுரு.