எழுத்தாளர் அருந்ததி ராய் பழி வாங்கப்படுகிறாரா?

பாய்கிறது உபா சட்டம்


அருந்ததி ராய்க்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்ல. புரட்சிகரமான எழுத்தாளர். 1997ம் ஆண்டு முதல் நாவலான தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸிற்காக புக்கர் பரிசை வென்ற முதல் வெளிநாட்டவர் அல்லாத பெருமைமிகு இந்தியர். இவருக்கு மோடி அரசு குறி வைத்திருப்பது சமூக ஆர்வலர்களை அதிரவைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே அருந்ததி ராய் மோடி அரசாங்கத்தின் மிக உயர்ந்த விமர்சகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரின் கூர்மையான விமர்சனங்கள் மக்களிடம் பேராதரவை பெறுகிறது. அதனால்தான் அவர் உபா சட்டத்தின் கீழ் மோடி அரசின் தூண்டுதலில் தற்போது குறிவைக்கப்படுகிறார்

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-ல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய Arundhati Roy அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பின் Unlawful Activities Prevention Act (UAPA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பது மர்மமாக இருக்கிறது.

அருந்ததி ராய் அவர்களின் பேச்சு இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 ஆகியவற்றிற்கு முரணாக உள்ளதெனில், அதே வகை குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்?

மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் இசுலாமியர்களை 'ஊடுருவல்காரர்கள்' என்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்றும் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் நச்சுமிகுந்த கருத்துக்களை கட்டவிழ்த்துவிட்டனர்.

“நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாகக் காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போல சித்தரித்து காயப்படுத்தினார் பிரதமர் மோடி.

 இது போன்ற நிகழ்வுகளில் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 கோமாவிற்கு சென்றது ஏன்? ஜனநாயகத்திற்கு எதிரான UAPA சட்டம் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்று. இச்சட்டத்தின் கீழ் 2019, 2020, 2021 ஆண்டுகளில் மட்டும் 4871 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 19 பேர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். பல பத்திரிகையாளர்கள் மீது வழக்கு உள்ளது. குறிப்பாக Manan Dar என்னும் புகைப்பட நிருபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பத்திரிகையாளர் சித்திக் கப்பான் 2020 முதல் 2023 வரை சிறையில் இருந்தார். இந்தியாவில் UAPA சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர்.

எனவே, தேவையில்லாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அருந்ததி ராய் அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்று கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே ஜனநாயகம்!