மன அழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும்.
பெண்களுக்கு இப்படித்தான் உண்டாகிறது மன அழுத்தம்! சிம்பிளாக தீர்க்கும் வழிகள் இதோ!
குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்...
காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, யோகா இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது மன அழுத்தத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது.
ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வைப்பதால் நாம் எந்த வேலையையும் மறக்காமல் இருக்கவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.
பேருந்துக்காக காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். காத்திருக்கும் சமயத்தில் ஒரு புத்தகத்தை கையில் வைத்து படிப்பது காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல் தேவையற்ற மன அழுத்தத்தையும் குறைக்கும்.
வேலைகளை பின்னர் செய்து கொள்ளலாம் என ஒதுக்கி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல பழகுங்கள். பத்து நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். தவறாய் போன ஒரு விஷயத்தை குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றை குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
செல்லும் இடங்கள், புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்வது சிறந்தது. மனதில் கவலைகள் இருக்கும்போது உங்களுக்கு பிடித்தவர்களுடனோ, அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தின் மீதோ கவனம் செலுத்துங்கள். மன அழுத்தம் இருக்கும் சமயத்தில் சிறிது நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்.
உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
எந்தவொரு செயலும் சுலபமாக செய்துவிட முடியும் என நினைத்து செயலை செய்ய தொடங்குங்கள்... கடினம் என்று நினைத்தால் நமக்கு மன அழுத்தம்தான் அதிகமாகும்.