டெல்லிக்குப் போகாத ஸ்டாலின்… மோடிக்குப் பயந்துவிட்டாரா?

திடீர் அறிக்கை பின்னணி


இண்டியா கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகியிருக்கும் தமிழக முதல்வர் மோடிக்குப் பயந்துவிட்டார் என்று பேசப்பட்ட நிலையில், திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்’ என்று கூறியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு ஆலோசனைக் கூட்டத்திற்குப் போவதே பலனுள்ளதாக இருக்கும் என்று ஸ்டாலின் நினைத்தே டி.ஆர். பாலுவை மட்டும் அனுப்பிவிட்டு அமைதியாக இருந்தாராம். ஆனாலும், தொடர்ந்து விவகாரமாக சிலர் கேள்வி எழுப்பியதால் இப்படி அறிக்கை விட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாராம்.