சுவாமி விவேகானந்தர் சிறிய வயதில் மனதில் ஏராளமான கேள்விகளுடன் அலைந்தவர். அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக சுவாமி ராமகிருஷ்ணர் அமைந்தார். அதனாலே தன்னிடம் கேள்வி கேட்கும் அத்தனை பேருக்கும் மிகவும் எளிமையாக ஆன்மிக பதில் சொல்வார் விவேகானந்தர். இதோ அவரது பதில்களைப் பாருங்கள்.
விதி என்றால் என்ன? அதனை மதியால் வெல்ல முடியுமா? சுவாமி விவேகானந்தர் சொன்ன பதில் இது!
விதி என்றால் என்ன? அதனை எப்படி வெல்வது? விதி எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை,போற்றுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது.
பாய்மரங்களை விரித்துக் காற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கப்பல்கள், தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களைச் சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை.
இது காற்றினுடைய குற்றமாகுமா? அதனால் நீ வகுத்துக்கொண்ட விதியின் வழியில் நீ செல்வதால், அதை வெல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
வெற்றி பெறும் தகுதி எல்லோருக்கும் உண்டா? வெற்றிக்கு ஆசைப்படுபவர்கள் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் சக்தியை சிதறவிடக் கூடாது. அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.
யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.